கதறி அழுதாள்.
கனவுலகம் தாண்டி விட்டாள் போலும்.
கண் திறந்து பார்த்தாள்.
கருவறையிருள் விடிந்தது போலும்.
முலைப்பால் முகர்ந்தாள்.
கள்ளிப்பால் தாண்டிவிட்டாள் போலும்.
“கண்ணே மணியே” தாலாட்டு கேட்டாள்.
“சாபமே சனியனே” வசைகள் வென்றாள் போலும்.
ஏட்டுப் பையில் கையை வைத்தாள்.
வீட்டு வேலைகள் வீசி எறிந்தாள் போலும்.
மட்டைப்பந்தால் முச்சந்தியில் கோலம் போட்டாள்.
பூட்டிய கதவுகள் திறந்தன போலும்.
வாய்ப்புகள் வந்தால் வாவென்று அழைத்தாள்.
பூப்பெய்தலின் புனிதச் சிறைகள் உடைத்தாள் போலும்.
கல்லூரிக் காற்றில் உயிரை நனைத்தாள்.
காசுக்குறைவெனும் காரணம் சிதைத்தாள் போலும்.
பட்டம் வாங்கி எட்டம் கடந்தாள்.
மட்டம் பேசிய வாய்கள் வதைத்தாள் போலும்.
கணினியும் காகிதமும் கைதேர்ந்து ஆண்டாள்
கைவிலங்கனைய கட்டுக்கோப்புகள் உடைத்தாள் போலும்.
காதலும் கணவனும் ஒன்றெனக் கொண்டாள்.
சுதந்திரச் சுயம்வர உரிமை வென்றாள் போலும்.
விரும்பும் நேரம் விழுதுகள் இட்டாள்.
வீண் மரபுகள் விலக்கினாள் போலும்.
வித்தைகள் புரிந்து விமானம் செலுத்தினாள்.
பித்த மூடர் வார்த்தையின் எல்லைகள் கடந்தாள் போலும்.
அடிக்கோடிடும் அளவு தன் வாழ்வைச் செழித்தாள்.
வகுக்கும் கோடுகள் சுவடோடு அழித்தாள் போலும்.
பாரெலாம் சுற்றினாள்.
பார்வையில் விரிவு கொண்டாள்.
பாரதியும் கண்டிராத புதுமைகள் தொடுத்தாள்.
பார்மிசை யாவரும்,
புதுமைகள் யாவும் மரபெனக் கொள்ளும் நாள் வரை
மாற்றம் நோக்கி உழைத்தாள்.
உலகம் ஏற்றம் காண்பதற்கே..
உணர்வாய் மானுடா !